Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிரிகெட் மட்டையால் அடித்து…. தந்தையை கொன்ற சிறுவன்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தாய் மற்றும் தங்கையை அடித்து துன்புறுத்தியதால் சிறுவன் கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்திலுள்ள புன்னங்குளம் என்னுமிடத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். வாரத்தில் ஒரு முறை மட்டுமே ஓமந்தூரான் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சிறுவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் பாண்டீஸ்வரிக்கு சொந்தமான ஒரு வீட்டை விற்று பணம் தருமாறு ஓமந்தூரான் வற்புறுத்தியுள்ளார். அதற்கு பாண்டீஸ்வரி சம்மதம் தெரிவிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த ஓமந்தூரான் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஓமந்தூரான் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த மகளையும் அவர் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சிறுவன் தட்டிக் கேட்ட போது தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்து சிறுவன் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ஓமந்தூரானை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சிறுவன் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓமந்தூரானின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரையில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |