சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்யபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர். அதன் பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர்.
அதன் பிறகு விமான கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்க கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.46,13,000 மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்தி வந்தவர் யார்? கழிவறையில் விட்டு சென்றது ஏன்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.