மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தில் பல மாதங்கள் மழை பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும் கொண்ட கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கே ஏரி, அருவி, நீர் தேக்கம் போன்றவை அதிகளவில் இருப்பதால் எப்போதும் பசுமையான சூழல் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐந்து லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் போன்ற பகுதிகளில் இந்த எந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஆணையர் கூறும்போது, கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு தண்ணீரை உற்பத்தி திறன், கிருமிநீக்கம் போன்றவை குறித்து ஆய்வு செய்தபின் நகர் பகுதிகளில் இதன் பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் காற்றின் ஈரப்பதத்தில் தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் பல்வேறு நகரங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.ஒரு எந்திரத்தில் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும்.
குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசில் இருந்து இது தண்ணீரை உற்பத்தி செய்கிறது. மண்ணில் உள்ளதுபோல படிமங்கள் இல்லாமல் காற்றின் மூலம் தூய்மையான தண்ணீரை இதன் மூலம் பெறப்படும். மேலும் உற்பத்தி செய்யும் தண்ணீரை சாதாரண நிலை, குளிர்ந்த நிலை, சூடான நிலை என 3 முறைகளில் வினியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. இதனை தயாரிப்பதற்கு மின்சாரம் மட்டுமே போதுமானது. ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய ரூ.1.80 பைசா மட்டுமே செலவாகிறது. வன விலங்குகள், விவசாய தேவைகளுக்கும் தண்ணீரை உற்பத்தி செய்ய சூரிய சக்தியில் இயங்கும் எந்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் அம்சமாகும்.