இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்ததால் ராணுவ காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாற்றம் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து கடந்த சில நாட்களாக பிரதீப்குமார் காவல்துறை கண்காணித்து வந்துள்ளனர். அதில் தகவல்களை பரிமாற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரை சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில் பாகிஸ்தான் பெண் உளவாளி அவருக்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடமிருந்து பிரதீப்குமார் மொபைல் போனில் அழைத்து பேசி வந்தபோது காதல் வசனங்களை பேசி, திருமணம் செய்து கொள்வதாக கூறி ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை அந்த உளவாளி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.