காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா(17) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரம் இறந்துவிட்டார். இந்நிலையில் அண்ணன் உறவு முறை வரும் வாலிபரை சங்கீதா காதலித்ததாக தெரிகிறது. இதற்கு சங்கீதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா சாமி கும்பிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சங்கீதாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதல் தோல்வியில் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.