கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழக்கு குறித்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 5 நபர்களின் ஜாமின் மனு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா போன்ற 4 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் பள்ளியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்கள் தரப்பில் கூரியதாவது “மாணவியின் உடல் 2 பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தங்கள்மீது என்ன வழக்கு என்று தெரியவில்லை. மாணவியின் இறப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி, இவ்வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் மனுதாரர்கள் என்ன குற்றம்செய்தனர்..? ஆசிரியர் மற்றும் தாளாளராக இருக்கும் காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனரா..? எதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற காரணத்தை இன்னும் 2 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.