கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் ஓய்வுறும் போது அது குறித்த வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயதை அடையும்போது பணி ஓய்வில் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டால் கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
இதனை தடுப்பதற்காக ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளில் மட்டுமே கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் வழங்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பின் ஓய்வு பெறும் நாள் அன்றே பணிவிடுப்பு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மாவட்டத்தில் கூட்டுமேலான்மையின் கீழாக செயல்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கை 500 ஆக இருந்தால் அவற்றில் எண்பது ஆசிரியர்கள் உபரி நிலை ஆசிரியர்கள்.
இதில் ஜூலை மாதத்தில் 5 ஆசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எடுத்துக் கொண்டால் ஐந்து ஆசிரியர்களுமே ஜூலை மாதத்திலேயே பணி விடுப்பு செய்யப்பட வேண்டும். அந்த பணியிடம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு தேவையான பணியிடமாக இருந்தால் மீதமுள்ள உபரியாக உள்ள 75 ஆசிரியர்களிலிருந்து ஆசிரியர்களை பணி நியமனம் செய்து காலியாகும் பணியிடங்களில் பொதுத்தொகுப்புக்கு நிரவல் செய்தல் வேண்டும்.
இவ்வாறு அனைத்து உபரி ஆசிரியர்களும் சமன் செய்யப்படும் வரை மறு நியமனம் நீங்காமல் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஒருவேளை கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படாத பள்ளியாக இருந்து தனி பள்ளியாக இருக்கும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால் மட்டுமே மறு நியமனத்தை வழங்க முடியும். முடிந்தவரை அந்த மாதமே ஓய்வு பெற அனுமதித்து விட்டு வேறு பள்ளிகளில் இருந்து பணி நியமனம் மூலமாக நியமித்தல் வேண்டும். அதன் பின்னர் பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.