டெம்போ சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு மீனச்சொல் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தீபக் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தீபக் கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த டெம்போ தீபக் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபத்தின் உடலை மீட்டு குழிதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.