தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
துணிவு, வீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே வீர சாகசச் செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தினத்தின்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்கு உரிய ஆவணங்களுடன் அரசு செயலாளர், பொதுத் துறை தலைமை செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக வரும் ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்தில் பெறப்படாத விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும். இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.