கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உள்ள பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வி ஆணையத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லி பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக பள்ளிக் கல்வித் துறையில் 2,398 சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கற்றல் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர். அதே சமயத்தில் கற்றல் குறைபாடு ஏற்படுவதற்கு சமூக ஊடகங்களில் அடிமையாவது காரணம் இல்லை. மேலும் சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில் கற்றல் குறைபாடு குறித்து 1,75,000 ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
1-ஆம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை 346 மாணவர்கள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து செலவு, உதவியாளர் படி, ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உளவியல் ஆலோசனை வழங்க 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் இருக்கிறது. இது தமிழகத்தில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அவற்றை தற்போதைக்கு மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அதில் கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்கனவே அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மேற்கொண்டு உத்தரவு ஏதும் பிறப்பிக்க அவசியம் இல்லை. அதே சமயம் அந்த நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்துவதில் அரசு உறுதி செய்து அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எனவே இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.