தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் பெருக்கு காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி ஈவேரா சாலை கங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கங்களை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும் மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈவேரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை, காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும். அதனைப்போலவே பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானா வை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.