இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீன தூதரகம் அருகே போராட்டத்தை மேற்கொண்டனர்.
சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. அப்போது இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் வர தொடங்கியது.
ஹவாய் அதிகாரி மெங் கைது செய்யப்பட்டதன் பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி, தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோரை சீனா கைது செய்தது. சீனாவின் இந்த செயல் மற்றும் சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் விரிவாக்க கொள்கைகளை கண்டித்து கனடாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வான்கூவரில் உள்ள சீன தூதரகம் அருகே நேற்று தீவிர போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, சீனாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக, ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் அதிகபட்சம் 50 நபர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது.