மனைவி போதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் குமரவேல்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி செட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி(48) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரவேல் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல மது போதையில் வீட்டிற்கு வந்த குமரவேல் கோமதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபத்தில் கத்தியை எடுத்து கோமதியின் முகம்,நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார்.
அவரிடமிருந்து உயிர் தப்பிப்பதற்காக கோமதி அந்த கத்தியை பிடுங்கி குமரவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குமரவேல் துடிதுடித்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த கோமதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோமதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.