சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் வகுப்பு ஆசிரியர் ஹேமலதா மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளார். அப்போது மாணவி கூறியதாவது, கடந்த சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாய்மாமனான சசிகுமார் என்பவர் அவரது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சிறுமியின் பெற்றோருக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் சசிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.