Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீர்!….. 21 குண்டுகள் முழுங்க….. ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்..!!

21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. இந்த தம்பதியருக்கு 2 மகன்கள்.. இதில் மூத்த மகன் ராமர். பி.பி.ஏ. படித்துள்ளார். இளைய மகன்தான் ராணுவ பணியில் இருந்து வந்த லட்சுமணன். ராமர் மற்றும் லட்சுமணன் இருவரும்  இரட்டையர்கள் ஆவர்… லட்சுமணனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. லட்சுமணன் பி.காம். படித்து முடித்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, ரைபிள்மேனாக பணிபுரிந்து வந்தார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்துள்ளார் லட்சுமணன். இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த தீவிரவாத தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.. இதற்கிடையே இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட பலரும்  தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தனர். அது மட்டுமின்றி தமிழக அரசின் சார்பாக 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உடல் ஜம்முவில் இருந்து டெல்லி எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஹைதராபாத் வழியாக, சரியாக இன்று காலை 11:50 மணியளவில் இண்டிகோ விமானம் மூலமாக உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இயக்குனர் அலுவலகம் முன்பு ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோன்று முன்னாள் அமைச்சராக இருக்கக்கூடிய ஆர்.பி உதயகுமார், பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தற்போது ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக டி.புதுப்பட்டி கிராமத்திற்கு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கொண்டு செல்லப்பட்டு வீட்டின் முன் வைக்கப்பட்டது. அங்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஓபிஎஸ், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வீட்டில் இருந்து அவரது தோட்டத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் லட்சுமணன் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சல்யூட் அடித்து இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் உட்பட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவர் பயன்படுத்திய கிரிக்கெட் பேட், சவப்பெட்டியின் மீது நினைவாக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரின் தாய் தந்தை மற்றும் நண்பர்கள் அனைவரும் கதறி அழுத காட்சி காண்பவரை கண்கலங்க வைத்தது.

Categories

Tech |