தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சார்பாக சி.பி.எஸ்.இ ஆய்வு மேற்கொண்டது. சென்ற வருடம் நவம்பர் 12 ஆம் தேதி 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு கிராமப்புறம்-நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் போன்றவற்றை சேர்ந்த மாணவர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த கேள்விகள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 3, 5, 8, 10 போன்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். தற்போது இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது ” கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் திறனில் தொடக்க வகுப்புகளில் மாணவ-மாணவிகள் இடையில் சமமான நிலை காணப்படுகிறது. எனினும் அடுத்தடுத்த வகுப்புகளில் இருதரப்புக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கிறது. இதனிடையில் 3-ம் வகுப்பில் கணிதபாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 301 ஆகவும், மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருந்தது. ஆனால் 10ஆம் வகுப்பில் கணிதபாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும், மாணவர்களின் மதிப்பெண் 219 ஆகவும் இருந்தது. இதன் வாயிலாக கணித பாடத்தை மாணவிகளை விடவும் மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கணிதத்தை தவிர பிற பாடங்களில் மாணவர்களைவிட மாணவிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அதுபோன்று சமூகவாரியாக பார்த்தால் பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் போன்ற பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்ற 2017 ஆம் வருடமும் இதேபோன்ற ஆய்வை மத்திய அரசு எடுத்தது. அந்த ஆய்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஆய்வில் குறிப்பாக கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது” என ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.