இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை மானசி நாயக், சென்ற ஆண்டு பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் சுமுக உறவு இல்லை எனவும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் எனவும் தகவல் பரவியது. இதற்கிடையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து திடீரென நீக்கியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இருவரும் பிரிவதை நடிகை மானசி நாயக் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் “நாங்கள் பிரிவதாக வெளியான தகவல் உண்மை தான். விவாகரத்து கேட்டு விண்ணப்பத்திருக்கிறேன். என்ன தவறு நடந்தது என கூறுவது சரியல்ல. நான் குடும்பம் நடத்த ஆசைப்பட்டு சீக்கிரம் திருமணம் செய்தேன். அங்கு தான் தவறு நடந்திருக்கிறது. ஒரு பெண்ணாக எனக்கும் சுய மரியாதை உள்ளது. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து போக முடியாது” என்று கூறியுள்ளார்.