உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இந்தர்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிஆர்பிஎப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தேர்தல் பணி போட்டதால் இந்தர்பால் அங்கேயே தங்கி, இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தர்பால் கடந்த 21ஆம் தேதி மனைவிக்கு மணிப்பூரிலிருந்து போன் செய்துள்ளார்.
ஆனால் கீதா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த இந்தர்பால் உடனே அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இந்தர்பால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கே கீதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனை அறிந்த இந்தர்பால் ஊருக்கு கிளம்பி வந்துவிட்டார். அதன்பின் தனது மனைவியை தேடி தரும்படி இந்தர்பால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, கீதாவின் செல்போனை ஆய்வு மேற்கொண்டபோது அதில் கீதாவிடம் முக்தர் என்பவர்தான் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதில் முக்தர் அப்பகுதியிலேயே கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அதனை தொடர்ந்து முக்தரை தேடி பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்தான் கீதாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையில் கீதாவின் கள்ளக்காதலனாக முக்தர் இருந்துள்ளார். அதாவது கீதா, முக்தர் இருவருமே நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென்று கீதா இன்னொரு நபருடன் பழகி வந்துள்ளார். இதை அறிந்த முக்தர், கீதாவை கண்டித்து இருக்கிறார். எனினும் கீதா அதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதனால் கீதாவை கொலை செய்ய முக்தர் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி முக்தர், கீதாவிடம் சமாதானம் பேச வரும்படி அவரை காரில் அழைத்து சென்றுள்ளார். அந்த காரில் மேலும் 2 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து காரிலேயே கீதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை அங்குள்ள கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவை அனைத்தையும் வாக்குமூலமாக முக்தர் தெரிவித்துள்ளதை அடுத்து அவர் கைதாகியுள்ளார். தற்போது கொலை செய்ய முக்தருக்கு உதவி செய்த 2 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.