மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் காட்டு ஏரப்பட்டி பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த சாலா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் சாலாவுடன் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருமுடுகு வளைவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன் மற்றும் சாலா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.