தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்தினால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கடற்கரையில் காலை வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகு காமராஜர் மண்டபம், காந்தி மண்டபம், தமிழன்னை பூங்கா, மீன் சுரங்க கண்காட்சி போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக செல்கின்றனர்.
இந்த பகுதியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலமாக படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இங்கு வழக்கமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். ஆனால் நேற்று முன்தினம் கடல் சீற்றமாக காணப்பட்டதால் காலை 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தனர்.