கடன் வசூலிக்க வந்த நபரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் எலக்ட்ரீசியனான முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடன் தொகையை வசூலிப்பதற்காக சிவாவின் வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி ஒருவரது வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். இது பற்றி எனக்கு தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தும் முருகானந்தம் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவரான முகமது என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு கோபமடைந்த முகமது முருகானந்தத்தின் வீட்டிற்கு சென்று தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த முருகானந்தத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.