இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மே 24 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.