தமிழக முழுவதும் சசிகலா சுற்றி பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியை பற்றியும் அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் நம் இயக்கத்தை அழித்துவிட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து கழகத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கழகத்தை நடத்தி செல்வதில் உறுதியாக உள்ளேன்.
நம் இயக்கத்தின் ஒரு தாய் வயிற்றில் பிள்ளையாக அனைவரும் ஒன்றிணைவோம். நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்று அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றுவோம். அதனைத் தொடர்ந்து அம்மா கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது. என்னென்ன திட்டங்களை அவர் கொண்டுவந்துள்ளார். அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலே தமிழகம் தன்னிறைவு பெற்று இருக்கும். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை, காலணி என ஏராளமான பொருட்களை வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மா மருந்தகம், ஏழை எளியவருக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டம், அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களை அம்மா கொண்டு வந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.