சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இது பற்றி பிஜேடி எம்பி டாக்டர் சஸ்மித் பத்ரா பேசும்போது, எம்எல்ஏவின் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயல் அதிர்ச்சி அளிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என கூறியுள்ளார். பிரசாந்த் ஜக்தேவ் கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக தலைவரை தாக்கியதாக கூறி பிஜேடி கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.