ரசிகர்கள் ஆரவாரம் மங்கைகளின் நடனம் என கோலாகலமாக நடக்கும் ஐ.பி.எல். திருவிழா இம்முறை எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது.
கொரோனா பரவலால் தொடக்க விழா இல்லாமல் நேரடியாக போட்டிகள் தொடங்குகின்றன. 13-ஆவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற 8 அணிகள் களம் காண்கின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடன மங்கைகள் மற்றும் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கின்றன. இதனால் வீரர்களை உற்சாகப்படுத்த பவுண்டரிக்கு பந்தை விளாசும் போது, விக்கெட் வீழ்த்தும் போதும், ரசிகர்கள் கரவொலி எழுப்பும் பழைய வீடியோவை மெகா திரையில் ஸ்டேடியத்தில் ஒளிபரப்ப உள்ளனர்.
டாஸ் போடும் போது கேப்டன்கள் கை குலுக்கக்கூடாது. ஆட்டம் முடிந்த பிறகு வீரர்கள் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 5 நாள் இடைவெளியிலும் வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். கொரோனா உறுதியானால் உடனடியாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். இரண்டு முறை நெகடிவ் முடிவு வந்த பிறகே அணிக்கு திரும்ப முடியும்.