திடீரென 6-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷன் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26 -ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷன் பெற்றோரிடம் விஷ பூச்சி கடித்ததாகவும், உடல் முழுவதும் எரிவதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மாணவனை அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.