திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதனால் கொரோனா காலகட்டங்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அதனால் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. தற்போது கொரோனா குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு அந்த நேரத்தில் மட்டும் 40 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதித்தனர். மேலும் தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதன்காரணமாக பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமானிய மக்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்காக விஐபி பிரேக் தரிசனம்வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்வதாக கூறப்பட்டிருக்கின்றது. கோடை வெயிலை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதிக்கு வந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.