சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன் முக்கிய பகுதியாக மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முழுமையாக இன்னும் பேருந்துகள் இயக்கப்படாமல் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கும் 2,225 பேருந்துகளுடன் 3090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் பிறவிகளில் இருந்து சென்னை வர ஏதுவாக 2,115 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.