கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய தலைமுறையினர் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பயந்தோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ, பெற்றோர் கண்டிப்பதாலோ அல்லது காதல் தோல்வியாலோ தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேப்பந்தட்டையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த பூவரசனை அவரது பெற்றோர் ஏன் ஒழுங்காக படிக்கவில்லை என கூறி கண்டித்தனர். இதனால் மன உளைச்சலையில் இருந்த பூவரசன் தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.