குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் மனைவியை கணவர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புவனா ஸ்ரீ மற்றும் சஞ்சய் ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரிடம் கூறாமலும், குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்ற செல்வியை சந்திரமோகன் கண்டித்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி கணவரிடம் சொல்லாமல் திருவண்ணாமலை பகுதியில் இருக்கும் ஒரு ஆசிரமத்திற்கு செல்வி சென்று வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சந்திரமோகன் குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு ஏன் செல்கிறாய் என்று கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த சந்திரமோகன் செல்வியின் தலையில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் செல்வியின் தலையில் ரத்தம் வடிந்துள்ளது. ஆனால் அதையும் கவனிக்காமல் செல்வி வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சந்திரமோகன் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சந்திரமோகன் நடந்த விவரங்களை கூறி திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரமோகன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.