சென்னை கிழக்கு தாம்பரம் எம்இஎஸ் சாலையில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 1 ½ வயதில் பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தகுழந்தை தவறுதலாக சிறியரக எல்.இ.டி பல்பை விழுங்கி விட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சென்ற வெள்ளிக்கிழமை அனுமதித்தனர்.
அதன்பின் அந்த குழந்தைக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சையளிக்க துவங்கினர். இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது, குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இப்போதுவரை குழந்தை சீரான உடல் நிலையில் இருக்கிறது. குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்ததில் எல்.இ.டி பல்பு தற்போது வயிற்று பகுதியில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆகவே குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.