திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல 227 காவல்துறை குழுக்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 13 வாக்குச்சாவடிகளாக பிரித்து வாக்குச்சாவடி மையங்கள் மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 266 மண்டலங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு தேர்தல் பணிக்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டல அலுவலர்கள் மூலம் கட்டுப்பாட்டு கருவி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி, உள்ளிட்ட வாக்குச்சாவடி பொருள்கள் கொண்டு செல்லப்படும். இதில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பொருள்களும் மினி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்த மினி லாரிகள் ஒவ்வொன்றிலும் கொண்டு செல்வதற்கு 10 முதல் 30 காவல்துறையினர் கொண்ட 227 குழுக்கள் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்களுடன் இந்த குழுவினர் இன்று இணைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்கின்றனர். ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வந்தனர். அங்கு காவல்துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு ரவிப்பிரியா அறிவுரைகளை வழங்கினார்.
காவல்துறையினருக்கான பணி இடங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்காக வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம், நிலைக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளுக்கு அந்தந்த பகுதிக்கான வாகனங்கள், நியமிக்கப்பட்ட காவல்துறை குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல அலுவலர்களுடன் இந்த குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். மேலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பணியிடம் கொடுக்கப்பட்டது.