உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ-காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற 15ஆம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர்.
அந்த காரை தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவுள்ள ஆனந்த் பிரகாஷ்(35) ஓட்டியுள்ளார். இவருடன் நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் காரில் சென்றிருக்கின்றனர். அப்போது தங்களது பயணத்தை காரில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் லைவ்வாக பதிவிட்டு இருக்கிறார். கார் 230 கி.மீ வேகத்தை நெருங்குவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனிடையில் காரில் இருந்த ஒருவர் 300 கி.மீ வேகத்தில் செல்லும்படி ஆனந்திடம் கூறுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
Video: Four people died in a car accident on #PurvanchalExpressway near #Sultanpur, UP
Minutes before the accident, the victims live-streamed a video showing their #BMW car touching a speed of 230 km/h#Sultanpur #Nukkadlive pic.twitter.com/1rB2PYjqgJ
— Nukkad Live (@Nukkadlive1) October 15, 2022
இந்நிலையில் காரின் பின்இருக்கையில் இருந்த நபர்களில் ஒருவர் நாம் 4 பேரும் சாகப் போகிறோம் என கூச்சலிடுவதும் வீடியோவில் கேட்கிறது. காரை ஓட்டிய ஆனந்த், வளைவு இல்லாத பகுதியை பார்த்தால் நான் வேகத்தை கூட்டுவேன் அனைவரும் சீட்பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதன்படி 230 கிலோ மீட்டர் வேகத்தை நெருங்கிய நிலையில், பேஸ்புக் நேரலையை நிறுத்தி இருக்கின்றனர்.
அதன்பின் சிறிது நேரத்தில் சாலையில் எதிரேவந்த லாரி மீது கார் வேகமாக மோதி இருக்கிறது. அதிவேகத்தில் சென்ற கார் லாரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர். இதற்கிடையில் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கார் 230 கி.மீ வேகத்தில் போகும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.