பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள ஒருவருக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தால் அவர் யாருக்கு கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.