தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
மேலும் 6 மாத காலத்திற்கு அவரிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி சம்பந்தமான எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நன்றி அண்ணாமலை ஜி. கட்சியிலிருந்து என்னை 6 மாதங்களுக்கு நீக்கி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. என்னை இடைநீக்கம் செய்தாலும் நான் தேசத்திற்காக உழைப்பேன் என கூறியுள்ளார்.