இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம்.
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். இது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அவர்கள், பின்னர் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதன் பின்னரே இலங்கை பாதுகாப்பு படையினரால் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடிந்தது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் சிறந்ததாக கலைப்பொக்கிஷமாக கருதப்படும் இந்த பொருட்கள் விலை மதிப்பற்றவை ஆகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை அரசு மேற்படி பொருட்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தவும், அவற்றை கண்டுபிடித்து மீட்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பொருட்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்த சரியான ஆவணங்கள் தொல்லியல் துறையிடம் இல்லை. தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடமாக அதிபர் மாளிகை அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டு இருந்தாலும், அதன் விவரங்கள் தொல்லியல் துறையிடம் இல்லாததால் அவற்றை மீட்டு வருவதில் சிக்கல் உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கையில் நேற்று பதவியேற்ற புதிய மந்திரிசபையின் முதல் கூட்டம் நேற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடந்தது. அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பள்ளிகள் என அனைத்து நிறுவனங்களின் சுமுக செயல்பாடுகளை உறுதி செய்து ஒரு வாரத்துக்குள் நாட்டில் இயல்பு நிலையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பு உள்ளதால், அதை ஒதுக்கீடு முறையில் வினியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என மந்திரி சபைக்கு தெரிவிக்கப்பட்டது. அரசியல்சாசன நடைமுறைகளை உறுதிசெய்யவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாக ரணில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கையில் அனைத்து கட்சிகளையும் அரசில் இணைக்கும் வகையில், மந்திரி சபையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அதிபரின் செயலகம் அருகே குவிந்திருந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் வலுக்கட்டாயமாக அகற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை கேட்டுக்கொண்டுள்ளது.