பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார்.
இந்த மருத்துவமனையில் சுனிதாதேவிக்கு ஸ்கேன் செய்தபோது அவருக்கு 2 கிட்னிகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. கிட்னிகள் திருடப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் சுனிதா தேவி பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் கிட்னி திருடப்பட்ட விவகாரம் பற்றி சுனிதா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் பெரிதானதை அடுத்து அந்த மருத்துவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மருத்துவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதனிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுனிதாவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு விரைந்து கிட்னி கிடைக்க ஐ.ஜி.ஐ.எம்.எஸ்-ஸில் பதிவுசெய்து இருப்பதாகவும் மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கிட்னி கிடைத்தவுடன் விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுனிதா தேவி கூறியதாவது “நான் வயிறு வலி என்றுதான் மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு மருத்துவர் என் கர்ப்பப் பையில் பிரச்சனை உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்து 2 கிட்னிகளை திருடிவிட்டார். எனக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். ஆகவே அவர்களுக்காக நான் உயிரோடு இருக்கவேண்டும். என் கிட்னியை திருடிய மருத்துவரை உடனே கைது செய்ய வேண்டும். அத்துடன் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரது கிட்னி எனக்கு வேண்டும். இதுபோன்று ஏழை மக்களின் வாழ்வில் பிரச்சனை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.