போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வீரராகவன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீரராகவனுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனையில் இருக்கும் மேலாளரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த வீரராகவன் தனது மனைவி பொற்செல்வி, மகள்கள் விஷ்ணு பிரியா, சாதனா ஆகியோருடன் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த போக்குவரத்து பணிகளை அதிகாரிகள் வீரராகவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து வீரராகவனின் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.