அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது.
அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுகவின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்தநிலையில் அது தொடர்பாக விவாதிக்க இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.