தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் ஈடுபட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைதன்மையுடன் விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த புகார் கொடுத்து சிபிஐ விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்து 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நேற்று முறையீடு செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை விரைந்து பட்டியலிடப்படும் என்று உறுதி அளித்தது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.