பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை அடித்து உடைத்து பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை பகுதியில் வசித்து வரும் பாண்டிசெல்வி(30) என்பவர் தேவாரம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டிசெல்வி வேலைக்கு சென்ற சமயத்தில் 2 மர்மநபர்கள் அவருடைய வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாண்டி செல்வி வீட்டு முன்பு இருந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர்.
மேலும் பாண்டி செல்வி பெற்றோரிடம் உங்கள் மகள் தேவையில்லாமல் எங்களுடைய விஷயத்தில் தடையிடுவதாகவும், இதேபோல் இருந்ததால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து பாண்டிசெல்வியின் பெற்றோர் போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.