கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் பொருள் செலவில் 2 பாகங்களாக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னிநதி, தேவராளன் ஆட்டம் உட்பட 6 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக இருக்கிறது.
இதையொட்டி படக் குழுவினர் இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி உட்பட பல நகரங்களில் “பொன்னியின் செல்வன்” படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இன்னும் 2 தினங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், புரமோஷன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, நடிகை திரிஷா போன்றோர் இன்று சென்னை திரும்பினர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, இத்திரைப்படத்தின் வாயிலாக பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றையும், பொன்னியின் செல்வன் நாவலையும் படித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோருக்கு ஏற்கனவே இந்தி திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், அவர்கள் நம் அடையாளமாக இருக்கின்றனர் எனவும் கார்த்தி தெரிவித்தார். அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிட வேண்டாம். 2 நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவரின் மன நிலையில் இருப்பதாக கார்த்திக் கூறினார்.