தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது திடீரென்று மழை பெய்ததால் மதன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கு இருந்த சமுதாய கூடத்தின் ஓரமாக நின்றுகொண்டிருந்தார். அதன்பின் மழை சற்று ஓய்ந்த பின் மோட்டார்சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் அருகிலிருந்த உயர்கோபுர மின் விளக்கின் கம்பத்தில் பட்டது.
இதனால் மதன் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கிவீசப்பட்டார். கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் போன்றோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.