சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது.
பணியின்போது குடித்து இருப்பது கண்டறியப்பட்டால் காவல் துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணிநீக்கம் உள்ளிட்ட மிகக்கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அத்துடன் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், பிற பணியாளர்களுக்கு 26 குறிப்புகள் உடைய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அவற்றில் பணியின்போது குடித்துவிட்டு வந்தாலோ, புகைப்பிடித்தாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். பணிமனைக்கு உள்ளே 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படவேண்டும். பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் . பணிமனைக்குள் பேருந்து போகும்போது ஓட்டுநர், நடத்துனர், பாதுகாவலர் 3 பேரும் பேருந்தில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, வெடிப்பொருட்களோ இருந்தால் அவற்றை காவல்துறை உதவியுடன் அகற்றவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.