அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ பன்னீர்செல்வம் படம் கிழிக்க பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது ஒப்புதல் இன்றி ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ பன்னீர்செல்வம் படம் கிழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.