மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கழுவந்திட்டை ஆர்.சி தெருவில் தொழிலாளியான ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டண பாக்கி தொகையை ஜஸ்டினால் உரிய நேரத்தில் செலுத்த இயலவில்லை. இதனால் பென்சி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பென்சியின் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பென்சி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.