கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது “தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையில் முறையாக உரிமம்பெறாமல் இயங்கிவரும் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விடுதியின் உரிமம்பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று, பார்ம் டி உரிமம் போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு 40 சதுரஅடி மற்றும் மகளிருக்கு 120 சதுரஅடி இடத்தை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதிசெய்ய வேண்டும்.
இதையடுத்து விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதிகாப்பாளர் பெண்ணாகவும் விடுதி பாதுகாவலர் ஆண், பெண் ஆகவும் இருக்க வேண்டும். அதன்பின் பாதுகாவலர் காவல்துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கைபதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு போன்றவை கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்யவும், உரிமம் பெற தேவையான படிவங்களையும https://kallakurichi.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இல்லங்கள், விடுதிகள் பதிவுசெய்தல் உரிமம்பெற மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் , மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், தொலைபேசி எண் (04151-295098) மற்றும் [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.