தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு,இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்றார். மேலும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உயர்கல்வியின் பொற்காலமாக எனது ஆட்சியின் காலம் இருக்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.