உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து திரத் சிங் ராவத் நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 4 மாதங்களுக்குள் அவர் திடீரென அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என பல்வேறு எம்.எல்.ஏக்களும், கட்சியின் உள்ளூர் தலைவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாக அகில இந்திய பாஜக தலைமை அவரை பதவி விலகச் செய்தது, இதனையடுத்து திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக கடந்த மார்ச் 10ம் தேதி திரத் சிங் ராவத் உத்தரகண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரத் சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மெளர்யாவை நேரில் சந்தித்து தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அளித்தார். 115 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ள திரத் சிங் ராவத் தான் அம்மாநிலத்தில் குறைந்த காலம் முதல்வராக இருந்தவராக மாறியுள்ளார். இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக செயல்படுவார் என பாஜக அறிவித்துள்ளது. 4 மாதங்களுக்குள் உத்தரகண்ட்டிற்கு 3வது முதலமைச்சர் மாற இருப்பது குறிப்பிடத்தக்கது.