கடந்த 5 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுமியை அவரது தந்தையும், சகோதரருமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே காலக் கட்டத்தில் சிறுமியின் தாத்தாவும், மாமாவும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை உறுதிசெய்துள்ள காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் இதில் எந்தவித நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாக காவல்துறை அலுவலர் ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புனேவில் உள்ள போலீஸ் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் கீழ் சகோதரர், 45 வயதான தந்தை போன்றோருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 வயது மதிக்கத்தக்க அவரது தாத்தா மற்றும் 25 வயது மதிக்கத்தக்க தூரத்து உறவான அவரது மாமாவுக்கு எதிராக பிரிவு 354-ன் கீழ் மானபங்கப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சிறுமிக்கு தற்போது 11 வயது ஆகிறது. இதில் சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது இவர்கள் புனேவில் வசித்து வருகின்றனர்” என்று கூறினார். அதன்பின் இது தொடர்பாக பேசிய காவல்துறை ஆய்வாளர் அஸ்வினி சத்புதே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த கருத்தரங்கின் போது தனக்கு நேர்ந்ததை சிறுமி பகிர்ந்து கொண்டபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது.
சென்ற 2017-ம் வருடம் பீகாரில் மாநிலத்தில் வசித்திருந்தபோது சிறுமியை அவரது தந்தை பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து சென்ற 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியை அவரது சகோதரர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கி இருக்கிறார். மேலும் தாத்தாவும் தூரத்து சொந்தமான மாமாவும் தகாத இடங்களில் சிறுமியை தொட்டுள்ளனர். இச்சம்பவம் தனித்தனியாக நடைபெற்று வந்துள்ளதால் ஒருவர் செய்திருப்பது மற்றவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது”என்று கூறினார்.